Last Updated : 01 Jan, 2018 09:03 PM

 

Published : 01 Jan 2018 09:03 PM
Last Updated : 01 Jan 2018 09:03 PM

12 வயது ரசிகரைத் தாக்கிய வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான்: அபராதத்துடன் தேசிய ஒப்பந்தமும் ரத்து

உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் தன்னை கேலி செய்த 12 வயது சிறுவர், ரசிகரை வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் தாக்கிய விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் தண்டனை அளித்துள்ளது.

சபீர் ரஹ்மானுக்கு ரூ.15 லட்சம் அபராதம், 6 மாதகால உள்நாட்டு கிரிக்கெ தடை மற்றும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளானார்.

வங்கதேச வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தம் ஜனவரி 1, 2018-லிருந்து நடைமுறைக்கு வந்த நிலையில் சபீர் ரஹ்மான் தனது துர்நடத்தையினால் அதனை இழந்துள்ளார்.

சபீர் ரஹ்மானின் சொந்த நகரான ராஜ்ஷாஹியில் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் போட்டியின் போது 12 வயது ரசிகர் ஒருவர் ரஹ்மானை கேலி செய்ததாகத் தெரிகிறது. இன்னிங்ஸ் இடைவெளியின் போது சைட் ஸ்க்ரீனுக்குப் பின்புறம் சென்று அந்த 12 வயது சிறுவனை அடித்து உதைத்துள்ளார்.

இதனை ரிசர்வ் நடுவர் பார்த்து விட ஆட்ட நடுவரிடம் புகார் அளித்துள்ளார், ஆனால் ஆட்ட நடுவர் சபீரை விசாரணைக்கு அழைக்க அவரையும் கடுமையாகத் திட்டியுள்ளார் சபீர்.

சபீர் ரஹ்மான் 10 டெஸ்ட் போட்டிகள், 46 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும் 33 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தன் எச்சரிக்கையில் தெரிவிக்கும் போது, “அனைத்து வீரர்களுக்கும் கடுமையான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம் அதுவும் இந்த புது வருட நாளில், ஒருவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி அவர் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவராக இருப்பது அவசியம்” என்று கூறியுள்ளது.

வங்கதேச பிரீமியர் லீக் டி20 போட்டிகளுக்கான பிட்ச் தயாரிப்பு பற்றி பொதுவெளியில் விமர்சனம் செய்ததற்காக தமிம் இக்பாலுக்கு 6,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி மைதானத்திலும் சரி, வெளியேயும் சரி அதன் வீரர்கள் ‘ரோக்’ போன்று நடந்து கொள்வதைப் பார்த்து வருகிறது, இதனால் வங்கதேச கிரிகெட்டுக்கும், நாட்டுக்கும் பெருத்த அவமானம் ஏற்படுவதாக வங்கதேச கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x