

பனாஜி: 37-வது தேசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான வாள் வீச்சில் தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.
37-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவா மாநில முதல்வர் பிரமோத்சாவந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்அனுராக் தாக்குர், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்பி.டி.உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் கண்கவர்கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டியில் கலந்துகொண்டுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங் களின் அணி வகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து ராட்சத பலூனில் பறந்து வந்தபடி வீராங்கனை ஒருவர் போட்டிக்கான ஜோதியை இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங், அலைச்சறுக்கு வீராங்கனை காத்யா கொய்லோ ஆகியோரிடம் வழங்கினார். அவர்கள் மைதானத்தை வலம் வந்தபடி விழா மேடையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜோதியை வழங்கினார்கள். அதைப் பெற்றுக்கொண்ட அவர், போட்டி முறைப்படி தொடங்குவதாக அறிவித்தார். வரும் நவம்பர்9-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் மகளிருக்கான சேபர் தனிநபர் போட்டியில் தமிழகத்தின்சி.ஏ.பவானி தேவி இறுதிப் போட்டியில் 15-5 என்ற கணக்கில் கேரளாவின் சவுமியாவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 2022-ம் ஆண்டுகுஜராத்தில் நடைபெற்றதேசிய விளையாட்டு போட்டியிலும் பவானிதேவி, தங்கம் வென்றிருந்தார்.