Published : 25 Oct 2023 06:30 AM
Last Updated : 25 Oct 2023 06:30 AM

ஆசிய பாரா விளையாட்டு: இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கம்

கோப்புப்படம்

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளில் இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. இந்நிலையில் நேற்றுநடைபெற்ற 2-ம் நாள் போட்டியின்போது 4 தங்கம் உட்பட 18 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

பாரா கனோய் (படகோட்டுதல் விஎல்-2 பிரிவு) போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ், மகளிர் டி20 400 மீட்டர் பிரிவில் தீப்தி ஜீவன்ஜி, ஆடவர் டி13, 5 ஆயிரம் மீட்டரில் சரத் சங்கரப்பா மகனஹள்ளி, ஆடவர் எஃப் 54/55/56 வட்டு எறிதல் பிரிவில் நீரஜ் யாதவ் ஆகியோர் தங்கம் வென்றனர். இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்திலும், ஈரான் 2-வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன.

இதனிடையே, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியவீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருவதற்கு பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “2-ம் நாள் போட்டியின்போது இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் உள்ளிட்ட 4 பேர் தங்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இந்தியாவை பெருமை அடையச் செய்துள்ளீர்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x