Published : 01 Jan 2018 10:53 AM
Last Updated : 01 Jan 2018 10:53 AM

இன்று மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் தொடக்கம்: புனேவில் கோலாகலம்

மகாராஷ்டிர ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி புனே நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

கடந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, இந்த ஆண்டு முதல் புனேவில் ஜனவரி 7 வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் உலக டென்னிஸ் தரவரிசையிலுள்ள குரோஷிய வீரர் மரின் சிலிச், நடப்புச் சாம்பியனும் ஸ்பெயின் வீரருமான ராபர்டோ பவுதிஸ்டா அகுத், இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது திறமையை நிரூபிக்கவுள்ளனர். முன்னணி வீரரான மரின் சிலிச், கடந்த ஆண்டில் 2-வது சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார். எனவே இந்த ஆண்டில் பட்டம் வெல்லும் நோக்குடன் களமிறங்குகிறார் மரின் சிலிச்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் பாம்ப்ரி, ராம்குமார் ஆகிய 2 இந்திய வீரர்கள் மட்டும் விளையாடவுள்ளனர். முதல் சுற்றில் ராம்குமார் ராமநாதன், ஸ்பெயின் வீரர் கார்பெலஸ் பீனாவுடன் விளையாடவுள்ளார்.

முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி, இந்திய வீரர் அர்ஜுன் கதேவை எதிர்த்து விளையாடுவார். அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று வரை முன்னேறிய தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆன்டர்சனும் இந்த முறை மகாராஷ்டிர ஓபன் டென்னிஸில் களம் காண்கிறார்.

இதேபோல இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- புரவ் ராஜா, ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடிகள் களமிறங்கவுள்ளன. அதேபோல இந்திய ஜோடி ஸ்ரீராம் பாலாஜி-விஷ்ணுவரதன் ஜோடியும் விளையாடவுள்ளது.

கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் பவுதிஷ்டா அகுத் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி பட்டத்தைக் கைப்பற்றியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x