Published : 09 Dec 2017 10:36 AM
Last Updated : 09 Dec 2017 10:36 AM
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 5 பதக்கங்கள் வென்றது.
ஜப்பானின் வாகோ நகரில் 10-வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று தொடடங்கியது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரவி குமார் 225.7 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றார். சீன வீரர்களான சாங் புஹான் 250.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், காவ் யிபி 248.6 புள்ளிகளுடன் வெள்ளிக் பதக்கமும் கைப்பற்றினர். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ககன் நரங் 205.6. புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் தீபக் குமார், ரவி குமார், ககன் நரங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இவர்கள் கூட்டாக 1876.6 புள்ளிகள் குவித்தனர். இந்தப் பிரிவில் சீன அணி 1885.9 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் அணி 1866.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின. ஜூனியர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா, 10 மீட்டர் ஏர் ரைபிளில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் யுகுன் லியூவிக்கும் அர்ஜூனுக்கும் இடையே 0.1 புள்ளி வித்தியாசம் மட்டுமே இருந்தது.
அணிகள் பிரிவில் அர்ஜூன் பாபுதா, சுன்மூன் சிங் பிராருடன் இணைந்து 1867.5 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை சிங்கப்பூர் வீராங்கனை டான் கியானிடம் இழந்தார். 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் அஞ்சும் மவுத்கில், மெக்னா, பூஜா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1247 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT