

மும்பை: உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இந்தச் சூழலில் இம்முறை உலகக் கோப்பை தொடரில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் குறித்த தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது. கடந்த 2011 உலகக் கோப்பை தொடர் முதல் தொடரை நடத்தும் நாடுகளைச் சேர்ந்த அணிகள் தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்ட முன்னாள் வீரர்கள் உலகக் கோப்பை 2023 தொடரில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் குறித்த தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர்.