Published : 03 Apr 2014 12:05 PM
Last Updated : 03 Apr 2014 12:05 PM

இறுதிச் சுற்றில் நுழைவது யார்? இலங்கை மே.இ.தீவுகள் இன்று மோதல்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதுகின்றன.மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மிர்பூரில் நடைபெறும் முதல் அரையிறுதியில் குரூப் 1-ல் முதலிடம் பிடித்துள்ள இலங்கை அணியும், குரூப் 2-ல் இரண்டாவது இடம் பிடித்துள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதுகின்றன. சூப்பர் 10 சுற்றில் இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளையும், 1 தோல்வியும் அடைந்துள்ளன.மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இலங்கை முழு பலத்துடன் விளங்குகிறது.

அதே நேரத்தில் நடப்பு சாம்பியனான மேற்கிந் தியத்தீவுகள் இத்தொடரில் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக விளையாடி எதிரணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முக்கியமாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதுவும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 82 ரன்களுக்கு சுருட்டி சாதனை படைத்தனர்.

சுநீல் நரைன், சாமுவேல் பத்ரி ஆகியோரின் சுழற்பந்து வீச்சு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சமி, பிராவோ, சிம்மன்ஸ், சாமுவேல்ஸ் ஆகியோர் வலுசேர்க்கின்றனர்.

தொடக்க வீரர் கிறிஸ் கெயிலின் ஆட்டம் எதிர்பார்த்ததைப் போல அதிரடியாக அமையவில்லை. எனினும் அரையிறுதியில் அவர் அதிரடியாக விளையாடினால் இலங்கை அணிக்கு அது பெரும் சவாலாக அமையும்.இப்போட்டியில் மேற்கிந்தியத்தீகள் வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை அணியும் பலம் வாய்ந்த பந்து வீச்சையும், பேட்டிங்கையும் கொண்டுள்ளது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் நியூஸிலாந்துக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேனநாயகா, மலிங்கா, குலசேகரா என சிறப்பான பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியில் உள்ளனர்.பேட்டிங்கில் மூத்த வீரர்கள் ஜெயவர்த்தனா, சங்ககரா, தில்ஷான் ஆகியோர் வலு சேர்க்கின்றன. தனது கடைசி டி20 தொடரில் விளையாடும் ஜெயவர்த்தனா கடந்த 4 போட்டிகளில் 134 ரன்களை எடுத்துள்ளார். அதே நேரத்தில் சங்ககாராவின் ஆட்டம் இத்தொடரில் குறிப்பிடும் படியாக இல்லை.

3 இன்னிங்ஸ்களில் 18 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.எனினும் திசாரா பெரேரா, குசல் பெரேரா, மேத்யூஸ், திரிமானி ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்ப்பார்கள். இரு அணிகளுமே ஏறக்குறைய சமபலத்துடன் உள்ளதால் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும்.

மேற்கிந்தியத்தீவுகள்:

சமி (கேப்டன்), கெயில், ஸ்மித், சிம்மன்ஸ், சாமுவேல்ஸ், பிராவோ, ராம்தின், ரஸல், பத்ரி, நரைன், ராம்பால், சன்டோக்கி.

இலங்கை:

சன்டிமல் (கேப்டன்), தில்ஷான், கே.பெரேரா, ஜெயவர்த்தனா, சங்ககாரா, திரிமனே, மேத்யூஸ், டி.பெரேரா, ஹெராத், லக்மல், பிரசன்னா, குலசேகரா.

போட்டி நேரம்: மாலை 6.30, நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x