Published : 05 Dec 2017 08:55 AM
Last Updated : 05 Dec 2017 08:55 AM
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்குவரை உயரக்கூடும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி கேப்டன் விராட் கோலிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.12 கோடிக்கும் அதிகமாக கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, சீனியர் வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை சமீபத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆண்டு வருமானமாக சுமார் ரூ.12 கோடி பெற்று வருகிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதற்கு சமமான அளவில் ஊதியம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும் அதேவேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளம் பெறும் விகிதம் குறித்தும் ஒப்பிட்டு விவாதம் நடைபெற்றது. இதன்முடிவில் பிசிசிஐ நிர்வாகக்குழு, வீரர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய ஒப்பந்தத்தின்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதிய ஒப்பந்தத்தின்படி ஏ கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ-12 கோடியம், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.8 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேவேளையில் கேப்டனுக்கு ரூ.12 கோடிக்கு அதிகமாக சம்பளம் இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் பிசிசிஐ இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT