

திருவனந்தபுரம்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று காலை ஆப்கன் அணியினர் வந்தனர். அவர்களுக்கு நட்சத்திர விடுதியின் ஊழியர்கள் தடபுடலாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை அன்று பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கன் அணி விளையாடுகிறது. அக்டோபர் 7-ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற உள்ள லீக் போட்டியில் ஆப்கன் அணி விளையாட உள்ளது. எதிரணியை அப்செட் செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்டுள்ளது ஆப்கன் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.