

ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்திய வீரர் முஹம்மது சிராஜ் ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 7 ஓவர்களை வீசிய சிராஜ், 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதன் மூலம் அவர் தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பவுலிங் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரியில் முதலிடத்திலிருந்த சிராஜ், மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டால் பின்னுக்குத் தள்ளப்பட்டார். தற்போது ஆசிய தொடர் மூலம் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இந்த தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 3-வது இடத்திலும் உள்ளார். மேலும், ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோர் முறையே 4 மற்றும் 5ஆவது இடங்களை பிடித்துள்ளனர். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 9ஆவது இடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.