Published : 15 Sep 2023 08:27 AM
Last Updated : 15 Sep 2023 08:27 AM

உலகக் கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி: இந்திய அணியின் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கருத்து

பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே

கொழும்பு: ஜஸ்பிரீத் பும்ராவின் வருகையால் இந்திய அணியின் பந்து வீச்சு துறை வலுப்பெற்றுள்ளது என்றும் உலகக் கோப்பை தொடருக்கு முழு உடற்தகுதியுடன் உள்ள 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயத்தில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கினார். 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் களமிறங்கிய பும்ரா, முழு உத்வேகத்துடன் செயல்பட்டார். தொடர்ந்து தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியதாவது:

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ராவின் உடற்தகுதி முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்து வந்தோம். அவரது உடற்தகுதி தொடர்பாக எங்களுக்கு கிடைத்த அறிக்கையால் மகிழ்ச்சி அடைந்தோம். தற்போது அணியில் தரமான 4 வேகப்பந்து வீச்சாளர்கள் (ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, மொகமது சிராஜ்) உள்ளனர். எப்போதுமே தேர்வில் சில விருப்பங்கள் இருப்பது சிறந்ததுதான். மொகமது ஷமி போன்ற ஒருவரை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. அவருக்கு இருக்கும் அனுபவமும், நாட்டுக்காக அவர் வெளிப்படுத்தி உள்ள செயல்பாடும் அபாரமானது. ஒரு வீரரை வெளியேற்றுவது போன்ற உரையாடலை நிகழ்த்துவது ஒருபோதும் எளிதானது அல்ல.

ஆனால் வீரர்களுடனான உரையாடலில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், அவர்கள், எங்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். நாங்கள் எடுக்கும் எந்த முடிவையும் வீரர்கள் அறிவார்கள், அது அணியின் நன்மைக்காகவே இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஹர்திக் பாண்டியா தன்னை வடிவமைத்துக் கொண்ட விதத்தால் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக நாங்கள் நீண்ட காலமாக உழைத்தோம். நாங்கள் அவரது பணிச்சுமையை நிர்வகித்து வருகிறோம்,

அவர் உடற்தகுதியுடன் இருப்பதையும், அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதை பெற முடியும் என்பதை உறுதியுடன் கூறமுடியும். ஹர்திக் பாண்டியா 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினால் வித்தியாசமான பந்து வீச்சாளராக இருப்பார். அணியின் கண்ணோட்டத்தில் அவர், விக்கெட் வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்தி கொடுப்பவராக திகழ்கிறார்.

அணியில் உள்ள சில பேட்ஸ்மேன்களின் பந்துவீச்சு திறனை மேம்படுத்தும் செயல்முறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில் திலக் வர்மா முக்கிய இடம்பிடித்துள்ளார். நான் திலக் வர்மாவுடன் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் போதே பணியாற்றி வருகிறேன். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது அவரிடம் பந்துவீச்சு திறன் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.

அதை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். திலக் வர்மாவால் ஒரு ஓவரை வீச முடியும் என்ற நம்பிக்கை கேப்டனுக்கு கிடைத்தால், இந்த ஒரு ஓவர் இரண்டு ஓவர்களாக மாறலாம். ஆனால் அது ஆட்டத்தின் சூழ்நிலையை பொறுத்தது. அந்த நேரத்தில் கூடுதல் பந்து வீச்சாளரின் தேவையும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x