ODI WC 2023 | மேலும் 4 லட்சம் டிக்கெட்களை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது பிசிசிஐ

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை மக்கள் மைதானத்துக்கு வந்து நேரில் பார்க்கும் வகையில் மேலும் 4 லட்சம் டிக்கெட்களை நாளை (செப்.8) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுகிறது.

அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் ரசிகர்களை குஷி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அண்மையில் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற்றது. ஐசிசி-யின் முதன்மை டிக்கெட் விற்பனை தளங்கள் இந்தப் பணியை கவனித்தன. அதில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்கள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

அதனால் தங்களால் டிக்கெட் பெற முடியவில்லை என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அதே நேரத்தில் இரண்டாம் நிலை சந்தை டிக்கெட்களின் விற்பனை தொடங்கியது. லட்ச கணக்கில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது அதிருப்தியை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த சூழலில் பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்களின் பொது விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி மாலை 8 மணிக்கு தொடங்கும். tickets.cricketworldcup.com என்ற அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை தளத்தின் மூலம் ரசிகர்கள் டிக்கெட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 19-ம் தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in