Published : 04 Sep 2023 11:40 AM
Last Updated : 04 Sep 2023 11:40 AM

ஃபின் ஆலன், கைலி ஜேமிசன் அபாரம்: இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த நியூஸிலாந்து!

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வரும் நியூஸிலாந்து முதல் 2 டி20 போட்டிகளில் இங்கிலாந்திடம் சக்கையாக உதை வாங்கியது. ஆனால் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் பழிக்குப் பழி வாங்கும் விதமாக இங்கிலாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் செம்மையாக வெற்றி பெற்று தொடரை 2-1 என்று உயிர்ப்புடன் தக்க வைத்துள்ளது. எனவே அடுத்த போட்டியிலும் நியூஸிலாந்து வென்றால் தொடரை சமன் செய்துவிடும்.

நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து ஃபின் ஆலன் (83), கிளென் பிலிப்ஸ் (69) ஆகியோரின் அதிரடி தர்பாரில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. இலக்கை விரட்டிய அதிரடி இங்கிலாந்து பாய் போல் சுருண்டு 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது.

நியூஸிலாந்து அணியில் தொடக்க அதிரடி வீரர் ஃபின் ஆலன் 53 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்தார், கிளென் பிலிப்ஸ் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் விளாசினார். பந்து வீச்சில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த கைலி ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் இஷ் சோதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நியூஸிலாந்து அணி 4வது ஓவடில் டெவன் கான்வே (9) விக்கெட்டை இங்கிலாந்துக்கு ரன் அவுட் மூலம் தாரை வார்த்தது. ஃபின் ஆலனும், கிளென் பிலிப்சும் 8 ஓவர்களில் 88 ரன்களைச் சேர்த்தனர், இடையில் டிம் செய்ஃபர்ட் 19 ரன்களில் லிவிங்ஸ்டன் பந்தில் பட்லர் ஸ்டம்ப்டு செய்ய ஆட்டமிழந்தார். ஆனால் இந்த 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் பெரிய ரன் விகித அதிகரிப்பை நியூஸிலாந்துக்கு வழங்கியது.

லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீத் சேர்ந்த் 8 ஓவர்கலில் 98 ரன்களை வாரி வழங்கினர். 15வது ஓவரில் ஆதில் ரஷீத் வீச வீறு கொண்டு எழுந்த ஆலன் 3 நேர் சிக்சர்களை விளாசினார். பிறகு லிவிங்ஸ்டனையும் ஒரு பெரிய சிக்சர் விளாசி 35 பந்தில் 50 ரன்களை எட்டினார் ஃபின் ஆலன். மறு முனையில் 27 பந்துகளில் அரைசதம் கண்ட கிளென் பிலிப்ஸ் 18வது ஓவரில் லிவிங்ஸ்டனை ஒரு கை பார்த்தார். இவரும் 3 சிக்சர்களை விளாசி இங்கிலாந்தின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

இங்கிலாந்து பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளை 31 ரன்களுக்குக் கைப்பற்றினார். இதில் கிளென் பிலிப்சை துல்லிய யார்க்கரில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி பவர் ப்ளேயில் வில் ஜாக்ஸ் (11), டேவிட் மலான் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. பவர் ப்ளேயில் இங்கிலாந்து 30 ரன்களையே எடுக்க முடிந்தது. பேர்ஸ்டோவும் 12 ரன்களில் காலியானார். 2015ம் ஆண்டுக்குப் பிறகு பவர் ப்ளேயில் இங்கிலாந்து எடுக்கும் 3-வது ஆகக்குறைந்த ஸ்கோர் இதுவே. அபார அபாய வீரர் ஹாரி ப்ரூக் இஷ் சோதி பந்தை கொடியேற்றி 8 ரன்களில் வெளியேறினார். கேப்டன் பட்லர் 3 டவரிங் சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 40 ரன்களையும் 16 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் மொயின் அலியும் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினர். ஆனால் 92/5 என்ற நிலையில் இருந்து 128 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. கைலி ஜேமிசன் 28 ரன்களுக்கூ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

செவ்வாயன்று ட்ரெண்ட் பிரிட்ஜில் தொடரை முடிவு செய்யும் கடைசி போட்டி நடைபெறுகிறது. ஆட்டம் முடிந்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறும்போது, “நியூஸிலாந்துக்கு வாழ்த்துக்கள், எங்களை விஞ்சி விட்டனர். டாஸில் வென்று ஆட்டத்தை எங்களிடமிருந்து வெகுதூரம் எடுத்துச் சென்றனர். இந்த இலக்கை விரட்ட வேகமான துவக்கம், நல்ல பவர் ப்ளே ஸ்கோர் தேவை, ஆனால் இரண்டையுமே நாங்கள் செய்யவில்லை.இரண்டு வலது கை வீரர்கள் ஆடும்போது மொயின் அலி பவுலிங் எடுபடவில்லை.” என்றார்.

நியூஸிலாந்து கேப்டன் டிம் சவுதி கூறும்போது, பேட்டிங் பவுலிங், பீல்டிங்கில் முதல் 2 போட்டிகளை விட இதில் சிறப்பாகச் செயல்பட்டோம். ஃபின் ஆலன் அடித்து நொறுக்கியதால் அவரைச்சுற்றி நாங்கள் கோட்டையைக் கட்ட முடிந்தது. இந்தப் பிட்சில் கிளென் பிலிப்ஸ் இன்னிங்சும் அவரது தரம் என்னவென்பதைக் காட்டுகிறது. முதல் ஓவர்களை நன்றாக வீசிவிட்டால் ஸ்பின்னர்கள் வரும்போது சுலபமாக இருக்காது என்பதைத்தான் செய்தோம், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x