

பாகு: ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் 577 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த தொடரில் இந்தியா வென்றுள்ள 5-வது தங்கப் பதக்கம் இதுவாகும். கொரியாவின் லீ குன்ஹியோக் 574 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் கெவின் சாப்போன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மகளிருக்கான ஸ்டாண்டர்டு பிஸ்டல் அணிகள் பிரிவில் டியானா, யாஷிதா ஷோகீன், கிருத்திகா ஷர்மா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,601 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.