Published : 17 Nov 2017 10:13 AM
Last Updated : 17 Nov 2017 10:13 AM
உலகக் கோப்பை தகுதி சுற்று 2-வது கட்ட பிளே ஆஃப் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 36 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு பெரு அணி தகுதி பெற்றது. கடைசியாக அந்த அணி 1982-ல் உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தது.
2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. 31 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த நிலையில் கடைசி அணியை தேர்வு செய்யும் பிளே ஆஃப் ஆட்டத்தில் நேற்று பெரு - நியூஸிலாந்து அணிகள் லிமா நகரில் மோதின.
28-வது நிமிடத்தில் நடுக்கள வீரரான கிறிஸ்டியன் குயேவா நியூஸிலாந்து அணியின் தடுப்பாட்ட வீரரை லாவகமாக ஏமாற்றி பந்தை முன்கள வீரரான ஜெஃப்பெர்சன் இர்பானுக்கு தட்டி விட்டார். அப்போது அவர் கார்னர் செய்யப்படாமல் இருந்ததால் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. 65-வது நிமிடத்தில் பெரு அணி 2-வது கோலை அடித்தது.
கார்னர் கிக் மூலம் பந்தை பெற்ற கிறிஸ்டியன் ரமோஸ், நியூஸிலாந்து வீரர்களின் தடுப்பாட்டத்தின் ஊடாக இந்த கோலை அடித்தார். கடைசி வரை போராடியும் நியூஸிலாந்து வீரர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5-வது முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்த இரு அணிகளும் கடந்த வாரம் மோதிய முதல் கட்ட பிளே ஆஃப் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்திருந்தது.
36 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு பெரு அணி தகுதி பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1982-ல் உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT