

சென்னை: மலேசியா அணிக்கு எதிரான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகண்டது.
7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனால் ஜப்பான் அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தை போராடி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.
தொடரை வெல்லக்கூடிய அணியாக கருதப்படும் 3 முறை சாம்பியனான இந்தியா, ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தடுமாற்றம் கண்டது. முக்கியமாக பீல்டு கோல் அடிப்பதில் கவனம் செலுத்தாமல் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பெறுவதில் அதீத ஆர்வம் காட்டியது. இருப்பினும் அதையும் இந்திய அணி வீரர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. ஜப்பான் அணிக்கு எதிராக 15 பெனால்டி கார்னர் இந்திய அணிக்கு கிடைத்தது.
இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மலேசியாவுடன் இன்று மோதியது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 18-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதேபோல், இரண்டாவது பாதியில் இந்திய அணி வீரர்கள் 4 கோல்கள் அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அசத்தியது.