Published : 17 Nov 2017 10:04 AM
Last Updated : 17 Nov 2017 10:04 AM

சீன ஓபன் பாட்மிண்டன் கால் இறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து: சாய்னா நெவால், பிரணாய் 2-வது சுற்றுடன் வெளியேற்றம்

சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார். அதேவேளையில் சாய்னா நெவால், பிரணாய் 2-வது சுற்றில் தோல்வியடைந்தனர்.

சீனாவில் புஸ்ஹாவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 11-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார். சுமார் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 18-21, 11-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற 2-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து தனது 2-வது சுற்றில் 21-15, 21-13 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 104-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூவை வீழ்த்தினார். சிந்து கால் இறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான காவோ பாங்ஜியை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரணாய், 19-21, 17-21 என்ற நேர் செட்டில் 50-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் லீ செக் யியு-விடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். தேசிய சீனியர் பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரணாய், சாய்னா ஆகியோர் சீன ஓபன் பாட்மிண்டனில் 2-வது சுற்றுடன் வெளியேறியது ஏமாற்றமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x