

சென்னை: எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
வழக்கமாக இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரில் நான்காவது வரிசையில் ஆடப் போகும் வீரர் யார் என்ற குழப்பம் தான் நிலவும். அது சார்ந்து பல்வேறு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த முறை அணியின் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் காயமடைந்த காரணத்தால் அவருக்கு மாற்றாக அணியில் விளையாடப் போகும் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வீரர்களுக்கான பட்டியலில் கே.எல்.ராகுல், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர். இதில் கே.எல்.ராகுல் இப்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இருந்தாலும் இவர்களில் யார் உலகக் கோப்பை தொடருக்கான விக்கெட் கீப்பர் என்பது தான் கேள்வி. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி ஆகியோர் முதல் மூன்று பேட்ஸ்மேன்களாக பேட் செய்வார்கள். நான்காவது பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் இடையே போட்டி இருக்கிறது. இருந்தாலும் விக்கெட் கீப்பராக அணியில் விளையாடும் வாய்ப்பு கே.எல்.ராகுல் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிய ராகுல், தற்போது விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. அதனால் உலகக் கோப்பை தொடரில் அவர் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது.