

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிதான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி அறிவித்துள்ளார்.
“நல்லதொரு கம்பேக் தொடராக இது அமைந்தது. மறக்கமுடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என எண்ணவில்லை. ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்” என மொயின் அலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி அறிவித்தார். இருந்தும் கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடருக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கம்பேக் கொடுத்தார். 36 வயதான மொயின் அலி, 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரங்கள் குவித்துள்ளார். 201 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மொயின் அலி உதவினார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.