Last Updated : 01 Nov, 2017 05:35 PM

 

Published : 01 Nov 2017 05:35 PM
Last Updated : 01 Nov 2017 05:35 PM

மும்பை அணி பற்றி நிறைய ‘பில்ட்-அப்’; நான் இன்னுமொரு அணியாகவே அணுகினேன்: தமிழக வீரர் பாபா இந்திரஜித்

இந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவரும் தமிழக வீரர் பாபா இந்திரஜித், மும்பை அணி பற்றி பில்ட் அப் அதிகமாகவும் ஊதிப்பெருக்கல் அதிகமாகவும் இருந்தது என்றும் ஆனால் தான் அந்த அணியை இன்னொரு அணியாகவே பார்த்ததாக தெரிவித்தார்.

தமிழக அணியின் 23 வயது வலது கை வீரரான பாபா இந்திரஜித், கிரீசில் மிகவும் கட்டுக்கோப்புடன் ஆடக்கூடியவர், இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 37 ஆட்டங்களில் 2384 ரன்களை 49.46 என்ற சராசரியில் எடுத்துள்ளார். தமிழக அணியில் மிகவும் பொறுப்பு வாய்ந்த நிலையான 4-ம் இடத்தில் களமிறங்குகிறார் பாபா இந்திரஜித்.

இந்த சீசனில் இந்தியா ரெட் அணிக்காக, இந்தியா ப்ளூ அணிக்கு எதிராக 280 பந்துகளில் 200 ரன்களை தன் அறிமுக துலீப் டிராபி போட்டியில் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதில் கடைசி விக்கெட்டுக்காக விஜய் கோஹில் என்பவருடன் இணைந்து 178 ரன்களைச் சேர்த்து அனைவரையும் திகைக்க வைத்தார் இந்திரஜித்.

கடைசியில் டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு ரன் எடுக்கும் ஒரு அரிய திறமை இவரிடம் இருந்தது அந்தப் போட்டியில் தெரியவந்தது. சமீபத்தில் மும்பையில் மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் 152 ரன்களை எடுத்தது, தமிழக அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை ரன்களைப் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தது, அந்தப் போட்டியில் தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தன.

இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு இந்திரஜித் கூறிய போது, “மும்பை அணியைப் பற்றி நிறைய பில்ட்-அப், பெருக்கப்பட்ட கருத்துகள், பேச்சுக்கள் நிலவின. ஆனால் மற்ற அணிகளைப் போலவே அணுகினேன்.

துலீப் டிராபி இரட்டைச் சதத்தின் போது கடைசி விக்கெட்டுக்காக 178 ரன்களைச் சேர்க்க முடிந்தது விஜய் கோஹிலின் வலுவான

தடுப்பாட்டத் திறமையினால்தான். நான் என் இயல்பான ஆட்டத்தை ஆட முடியும் என்று கருதினேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு திருப்தி அளித்ததற்குக் காரணம் என் சகோதரன் பாபா அபராஜித் துலீப் அறிமுக போட்டியில் சதம் எடுத்திருந்தார்.

அரைசதத்தை சதமாக மாற்றுவதில் தற்போது ஓரளவுக்கு நிறைவடைந்துள்ளேன். தற்போது 160-170 பந்துகளை எதிர்கொண்டால் சதம் அடித்து விடுவேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நான் ஆன் சைடில் விளையாடுவதில் வலுப்பெற்றுள்ளேன். என் பயிற்சியாளர் எஸ்.பாலாஜி, முன்னாள் ரயில்வே கிரிக்கெட் வீர்ர்கள் கால் நகர்த்தலை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்.

எனக்கும் சகோதரர் பாபா அபராஜித்துக்கும் இடையே ஈகோ கிடையாது. வீட்டில் ஒரே அறையில்தான் இருவரும் இருக்கிறோம், பரஸ்பரம் எங்கள் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

இவ்வாறு கூறினார் பாபா இந்திரஜித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x