Last Updated : 08 Nov, 2017 01:32 PM

 

Published : 08 Nov 2017 01:32 PM
Last Updated : 08 Nov 2017 01:32 PM

ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம் - சோனியா லேதர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்

ஹோ சி மின் சிட்டிஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மேரி கோம் 5-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான சோனியா லேதர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

வியட்நாமில் ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் மேரி கோம், இறுதிப் போட்டியில் வட கொரியாவின் கிம் ஹைங் மியை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய 35 வயதான மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவர், தங்கப் பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும்.

6 முறை இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள அவர் 2003, 2005, 2010, 2012-ம் ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். ஒரு முறை வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மேரி கோம் அதன் பிறகு தற்போது தான் சர்வதேச போட்டியில் மகுடம் சூடியுள்ளார்.

57 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனியா லேதர், சீனாவின் யின் ஜான்ஹூவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தத் தொடரில் சோனியா, 2-வது இடம் பெறுவது இது 2-வது முறையாகும். ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கத்துடன் நிறைவு செய்தது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா 6 பதக்கம் வென்றிருந்தது. ஆனால் இதில் தங்கப் பதக்கம் அடங்கவில்லை.

இந்நிலையில் பதக்கம் வென்ற மேரி கோம் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் வென்றுள்ள தங்கப் பதக்கம் இந்தியாவின் பெண் சக்திக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும். 3 குழந்தைகளின் தாயான மேரி கோம் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் எனது பாராட்டுக்கள். கடினமாக உழைத்து வரும் குத்துச்சண்டை வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு வரும் காலங்களில் இந்தியா குத்துச்சண்டையில் பெரும் சக்தியாக விளங்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும்” என்றார்.

இதற்கிடையே தங்கப் பதக்கம் வென்ற மேரி கோமுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துகள். உங்களது சாதனையால் நாடு மகிழ்ச்சி கொள்கிறது” என
தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x