Published : 27 Apr 2014 12:00 AM
Last Updated : 27 Apr 2014 12:00 AM

ஆசிய பாட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து, ஜுவாலா – அஸ்வினி தோல்வி

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதன் மூலம் வெண்கலப்பதக்கத்துடன் இவர்கள் ஆறுதல் அடைய வேண்டியதாயிற்று.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள பி.வி. சிந்து, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் சிக்சியாங் வானை எதிர்கொண்டார். இதில் முதல் கேமை 21-15 என்ற கணக்கில் வென்று சிந்து முன்னேற்றம் கண்டார். இதனால் 2-வது கேமில் விறுவிறுப்பு கூடியது. இருவரும் சளைக்காமல் போராடினர். இறுதியில் 22-20 என்ற கணக்கில் வான் இந்த கேமை வென்றார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற 3-வது கேமில் வாங் மெதுவாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இறுதியில் 21-15 என்ற கணக்கில் 3-வது கேமை வாங் கைப்பற்றி, போட்டியில் வென்றார்.

சுமார் 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை இந்த போட்டி நீடித்தது. கடுமையாக போராடியபோதிலும் சிந்துவால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அரையுறுதி வரை முன்னேறியதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் லுயோ ஜிங், லுயோ யு ஜோடியை அரையிறுதியில் எதிர் கொண்டது. சுமார் 33 நிமிடங்களே நீடித்த இந்த ஆட்டத்தில் 21-12, 21-7 என்ற கணக்கில் மிகவும் எளிதாக சீன ஜோடி வென்றது.

தரவரிசையில் 10 வது இடத்தில் உள்ள சீன ஜோடி, இப்போது 3-வது முறையாக இந்திய ஜோடியை தோற்கடித்துள்ளது. எனினும் அரையிறுதி வரை முன்னேறிய ஜூவாலா – அஸ்வினிக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x