Published : 10 Jun 2023 08:02 PM
Last Updated : 10 Jun 2023 08:02 PM

WTC Final நாள் 4 | ஏமாற்றிய சுப்மன் கில் - வெற்றி இலக்கான 444 ரன்களை துரத்தும் இந்தியா!

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களில் டிக்ளேர் கொடுத்துள்ளது. இதையடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 444 ரன்களை இந்திய அணி விரட்டி வருகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 173 ரன்கள் பின்தங்கியதுடன் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

173 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை போல ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சிராஜ். இம்முறை டேவிட் வார்னரை ஒரு ரன்னில் வெளியேற்றினார். சிறிதுநேரத்தில் மற்றொரு ஓபனர் உஸ்மான் கவாஜாவை 13 ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு உதவிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் கூட்டணியை இம்முறை சீக்கிரமாகவே வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார் ரவீந்திர ஜடேஜா. வந்தது முதல் ரன் சேகரிப்பில் தீவிரம் காட்டிய ஸ்டீவன் ஸ்மித்தை 34 ரன்களில் 3வது விக்கெட்டாக சாய்த்த ஜடேஜா, ட்ராவிஸ் ஹெட்டையும் சிறிது நேரத்தில் காட்டன்போல்டக்கினார். ட்ராவிஸ் ஹெட் 18 ரன்களில் நடையை கட்டினார். எனினும் ஒன்டவுன் வீரராக இறங்கி பொறுமை கடைப்பிடித்தார் ஆஸியின் முன்னணி பேட்ஸ்மேன் லபுசேன். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலையில் இருந்தத்து.

இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் லபுசேன்னை 41 ரன்களில் அவுட்டாக்கினார் உமேஷ் யாதவ். அந்த விக்கெட் இந்திய அணி ரசிகர்களுக்கு இது பெரும் ஆசுவாசம் கொடுத்தது. அடுத்து ஜடேஜாவின் ஓவரில் கேமரூன் கிரீன் போல்டானது ஆஸி., பேட்ஸ்மேன்களின் வேகத்தை தணித்தது. அலெக்ஸ் கேரி - மிட்செல் ஸ்டார்க் இணைந்து விக்கெட்டாகாமல் கவனமாக ஆடி, இந்திய பவுலர்களுக்கு போக்கு காட்டினர்.

குறிப்பாக, அலேக்ஸ் கேரி அரைசதம் விளாசி பொறுப்பாக ஆடினார். உணவு இடைவேளைக்கு பிறகும் கூட இந்த பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. முஹம்மது சமி மிட்செல் ஸ்டார்க்கை 41 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து பேட் கம்மின்ஸ் விக்கெட்டானதும் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 270 ரன்களில் டிக்ளேர் கொடுத்து இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், முஹம்மது சமி, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

444 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி 41 ரன்களை சேர்த்து ஆடி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x