Published : 07 Jun 2023 02:10 PM
Last Updated : 07 Jun 2023 02:10 PM

WTC Final | நீளமான பவுண்டரிகள், பவுன்ஸ் பிட்ச் - ஆஸி. வேகத்தை சமாளிக்குமா இந்திய அணி?

ஐபிஎல் பளபளப்பும் கிளுகிளுப்பும் ஓய்ந்த பிறகு உண்மையான கிரிக்கெட் இப்போது ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அதுவும் ஒரு பெரிய நிகழ்வான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாக நடைபெறவிருக்கிறது. இதில் குறுக்கப்பட்ட பவுண்டரிகள், மட்டை ரன் குவிப்பு பிட்ச்கள் என்று ஐபிஎல்லில் சூரப்புலிகளாக திகழ்ந்த இந்திய வீரர்கள் நீளமான ஓவல் பவுண்டரிகள், ஓரளவுக்கு கிரீன் டாப், பவுன்ஸ் பிட்சில் தேறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ‘அச்சமில்லை’ என்றும், ஐசிசி டிராபி என்ற நெருக்கடியும் இல்லை என்றும் கூறுகிறார். இப்படிக் கூறினாலே நம் கண் முன் வருவது என்னவெனில், கடந்த முறை நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பலாகத் தோற்றுவிட்டு ‘ஒரு டெஸ்ட்டை வைத்து முடிவு கட்ட முடியாது’, என்றும், ‘கடந்த 2 ஆண்டுகளாக ஆடியதை விட்டு விட்டு இந்த இறுதிப் போட்டி கேட்கிறீர்களே’ என்றும் விதம் விதமாக இந்திய கேப்டனும் அணி நிர்வாகமும் கதைத்ததுதான் நினைவுக்கு வருகின்றது.

ஆஸ்திரேலிய கேப்டனோ, ‘ஓர் அணி ஆஸ்திரேலியாவை உண்மையிலேயே படுத்தி எடுக்கிறது என்றால், அது இந்திய அணிதான்’ என்று கூறியுள்ளார். இந்த முறை ஓவல் பிட்ச், நீள பவுண்டரிகள் போன்றவை ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்புகளையே அதிகப்படுத்தியுள்ளதாக ரிக்கி பாண்டிங்கும், வாசிம் அக்ரமும் கூறியுள்ளனர்.

ராகுல் திராவிட் இந்த கிராண்ட் இறுதிப் போட்டிக்கு முன் கூறும் ஒரு வாக்கியம் வேடிக்கையாக உள்ளது, “இந்த 5 நாட்களும் எது நடக்குமோ அதுதான் நடக்கும்” என்கிறார். ஒரு பயிற்சியாளர் இப்படி பேசுவது வேடிக்கைதான். மேலும், அவரது பொன்மொழி இதோ: “இந்த 5 நாட்களுக்கு முன்னால் நடந்ததற்கும் பின்னால் நடப்பதற்கும் வித்தியாசம் ஏதும் இருக்கப்போவதில்லை” என்று ஒரு கிரேக்க தத்துவ ஞானி கூறலாம்; ஆனால் கிரிக்கெட் பயிற்சியாளர் இப்படிப் பேசுவதுதான் நம் கவலையாக உள்ளது.

இதை விட ஒன்று கூறினாரே பார்க்கலாம், இது உலகில் அனைவருக்கும் தெரிந்த பொதுப்புத்தி, இதை பிரஸ் மீட்டில் கூறுகிறார் ராகுல் திராவிட்: “இரண்டு நல்ல அணிகள் மோதும்போது இந்த 5 நாட்களில் யார் நன்றாக ஆடுவார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.” - வேடிக்கையின் உச்சக் கட்டம். மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவது அணி கட்டமைப்பு எப்படி, பிட்ச் இப்படியிருந்தால் என்ன உத்தி, எப்படி பேட்டிங் ஆடப்போகிறோம், பவுலிங்கில் ஸ்பின்னுக்கு முக்கியத்துவம் இருக்குமா போன்ற விஷயங்கள்தானே தவிர திராவிட் கூறுவதுதான் சின்ன பிள்ளைகளுக்கும் தெரிந்ததுதானே. யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்கள் வெல்வார்கள் இதில் என்ன விஷயம் இருக்கிறது? கடைசியில் எந்த வித உத்தி என்பதையெல்லாம் பேசாமல் ‘ எனக்கு நம்பிக்கை இருக்கின்றது நன்றாக ஆடுவோம் வெற்றி பெறுவோம் என்று ஒரு பொத்தாம் பொது நம்பிக்கையுடன் பேசுகிறார் திராவிட்.

மேலும், நாம் மேலே குறிப்பிட்டது போல் தோற்றால் என்ன என்பதற்கும் நியாயப்படுத்தும் வாதத்தை இப்போதே வைக்கிறார் திராவிட், “கடந்த 5-6 ஆண்டுகளாக உலகம் முழுதும் சவாலான ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற வெற்றி உள்ளிட்டவை ஒரு ஐசிசி டிராபி இல்லாததால் மாறிவிடாது. இருந்தாலும் வெற்றி பெற்றால் நன்றாகத்தான் இருக்கும்” என்று வெற்றி பெறுவோம், அதற்கு இன்னின்ன செய்திருக்கிறோம் என்று உறுதியுடன் திராவிட் பேசவில்லை.

பயிற்சியாளர் இப்படி உறுதியற்று பேசும்போது அதன் தாக்கம் நிச்சயம் அணி வீரர்களிடத்திலும் ஊடுருவவே செய்யும். ஏற்கெனவே வேகப்பந்து வீச்சு, ஸ்விங், கிரீன் டாப் என்றால் கடினம் என்ற நிலையில் ஓவல் பிட்ச் நிச்சயம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் எனும்போது ஆஸ்திரேலியாவுக்கு சாதகத்தன்மை அதிகம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய அணியின் சாதக அம்சங்களுக்கு இங்கு பும்ரா இல்லாதது ஒரு பெரிய பின்னடைவே. இருப்பினும் ஷமி முன்னின்று வழிநடத்துவார் என்றாலும், அவருக்கு சப்போர்ட் பவுலர் வேண்டும். எது எப்படியிருந்தாலும் அஸ்வினை உட்கார வைக்கும் பெரும் தவறைச் செய்து விடக்கூடாது என்பதை மட்டும் நாம் இங்கு வலியுறுத்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x