Published : 23 Oct 2017 06:48 AM
Last Updated : 23 Oct 2017 06:48 AM

இந்திய மண்ணில் சிறந்த விரட்டல் கூட்டணி; லேதம், டெய்லர் சாதனை; நியூஸி. அபார வெற்றி

மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியில் விராட் கோலி தன் 31-வது சதத்தை எடுக்க 280 ரன்களை 8 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது இந்திய அணி. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் டாம் லேதம் (103 நாட் அவுட்), ராஸ் டெய்லர் (95) ஆகியோர் அபாரமாக ஆடி இந்திய மண்ணில் விரட்டலில் 200 ரன்கள் கூட்டணி அமைத்து சாதனை படைத்ததோடு வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 49 ஓவர்களில் 284/4 என்று நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று, எப்போதும் புகழ்ந்து தள்ளப்படும் இந்தியப் பந்து வீச்சு மீது ஒரு கேள்விக்குறி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் 31 சதங்களுடன் இடம்பெற்றுள்ளார். ஆல் டைம் பட்டியலில் கோலிக்கு இரண்டாவது இடம். கோலியின் இந்த நாளை லேதம், டெய்லர் கூட்டணியினர் தங்கள் நாளாக மாற்றினர்.

இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக இலக்கை விரட்டும் போது எதிரணியினர் அமைத்த அதிகபட்ச ரன் கூட்டணிக்கான ஒரு அரிய சாதனையை டாம் லேதம், ராஸ் டெய்லர் கூட்டணி மேற்கொண்டது. 80/3 என்ற நிலையிலிருந்து 280/3 என்பது வரை வெற்றிக்கூட்டணி அமைத்தனர் லேதம், ராஸ் டெய்லர்.

விராட் கோலியின் 121 ரன்களுக்கு அடுத்த இந்திய பேட்ஸ்மெனின் அதிகபட்ச ஸ்கோர் இந்த இன்னிங்சில் தினேஷ் கார்த்திக் எடுத்த 37 ரன்களே. கோலிக்கும் மற்ற வீரர்களுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளிக்கான அடையாளம் ஆகும் இது.

நியூஸிலாந்து அணி இந்திய அணி போல் அல்லாமல் தொடக்கத்தில் கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆடியது. கொலின் மன்ரோ ரிஸ்க் எடுத்து ஆடி ரன்களைச் சேர்த்தார். முதல் ஓவரிலேயே 2-வது பந்தில் மார்டின் கப்தில் அருமையான நேர் டிரைவ் பவுண்டரியையும் லாங் ஆனில் இன்னொரு பவுண்டரியையும் அடுத்தடுத்து அடித்தார். பிறகு புவனேஷ் பந்து ஒன்றிற்கு முன் கூட்டியே ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்த மன்ரோ ஸ்கொயர் லெக்கில் அற்புதமான பிளிக் மூலம் சிக்ஸ் விளாசினார். ஆனால் அடுத்த பந்தே பவுல்டு ஆகியிருப்பார் தப்பினார்.

மீண்டும் பும்ராவின் பந்தை பிளிக் ஆடிய மன்ரோவுக்கு ஸ்கொயர்லெக்கில் அதிர்ஷ்டம் காத்திருந்தது, கேதார் ஜாதவ் கேட்சை விட்டார். அது பவுண்டரியுமானது. 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் மன்ரோ, பும்ராவின் வேகம் குறைந்த ஆஃப் கட்டர் பந்தை பிளிக் செய்கிறேன் பேர்வழி என்று கவர் பாயிண்டில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 9.3 ஓவர்களில் நியூஸிலாந்து 48/1.

கேன் வில்லியம்சன் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் திட்டமிட்டு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வைடாக வீச அவர் டிரைவ் ஆடினார், உடலிலிருந்து தள்ளி ஆடியதால் பந்து ஆஃப் திசையில் மேலெழும்பிய பந்தை ஜாதவ் பிடித்தார். கடந்த 21 ஒருநாள் போட்டிகளில் கேன் வில்லியம்சன் முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்கிறார்.

பிறகு 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த மார்டின் கப்தில் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட பந்து சரியாகச் சிக்காமல் எழும்பியது அதனை தினேஷ் கார்த்திக் ஓடி வந்து அருமையாகப் பிடித்தார், நியூஸிலாந்து 80/3 என்று ஆனது.

அதன் பிறகு லேதம், டெய்லர் இணைந்தனர், லேதம் ஸ்பின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டார், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்று இந்த ஷாட்களிலேயே சுமார் 30-35 ரன்களை அடித்திருப்பார் லேதம். டெய்லரும் நிதானப் போக்கைக் கடைபிடித்தார், ஸ்பின்னர்கள் அவ்வப்போது பீட்டன் ஆனார்கள் ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு சாஹல், குல்தீப் அச்சுறுத்தல் இல்லை. அப்படியும் 2 பிற வாய்ப்புகள் ஏற்பட்டன 31-வது ஓவரில் டெய்லரை தோனி ரன் அவுட் செய்திருக்கலாம் ஆனால் அந்த வாய்ப்பு நழுவியது. தோனி த்ரோ செய்தார் ரன்னர் முனையில் பவுலர் சாஹல் பந்தைச் சேகரிக்கும் இடத்தில் இல்லை. பிறகு கோலியின் நேரடி த்ரோ ஒன்று ஸ்டம்பை மிஸ் செய்ய அப்போதும் டெய்லர் தப்பினார்.

விராட் கோலி வேகப்பந்து வீச்சுக்கு மாறினார் ஒன்றும் பயனில்லை, பிறகு மீண்டும் ஸ்பின் பந்து வீச்சாளர்களிடம் வந்தார், ஆனால் அப்போது நியூஸிலாந்து வெற்றிக்குத் தேவை 60க்கும் கொஞ்சம் கூடுதல் ரன்களே. கடைசியில் ராஸ் டெய்லர் 95 ரன்களில் ஸ்கோர் 280ஆக இருக்கும் போது ஆட்டமிழந்தார். ஆனால் லேதம் 102 பந்துகலில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். குல்தீப் யாதவ், சாஹல் 20 ஓவர்களில் 115 ரன்களை கொடுக்க மற்றொரு விதந்தோதப்படும் பந்துவீச்சுக் கூட்டணியான பும்ரா-புவனேஷ் 19 ஓவர்களில் 112 ரன்களைக் கொடுத்தனர். கேதார் ஜாதவ் பிரேக் த்ரூ பவுலர் ஆனால் அவரைக் கொண்டு வராமல் விராட் கோலி ஆடியது புரியவில்லை. ஆட்ட நாயகனாக டாம் லேதம் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x