திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: மே மாத டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு
திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதத்தில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையத்தில் நாளை வெளியிட உள்ளது.
அதன்படி, 18ம் தேதி காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
21ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 23ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக அங்க பிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகளும், இதே நாள் மதியம் 3 மணிக்கு மாற்றுத்திறனாளி பக்தர்கள், மூத்த குடிமகன்களுக்கான டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
இம்மாதம் 24ம் தேதி காலை 10 மணிக்கு மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, அதே நாள் மதியம் 3 மணிக்கு தங்கும் அறைகளுக்கான டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
