

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் செப்டம்பர் மாதம் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வரும் 18-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியாகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்க வரும் ஜூன் 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை, பக்தர்கள் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக அங்கபிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகளும், இதே நாள் மதியம் 3 மணிக்கு மாற்று திறனாளி பக்தர்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.