

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில், 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் யோக நாராயணி அலங்காரத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து காலை 8 மணி முதல் 10 மணி வரை 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை வழிப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, இரவு சந்திர பிரபை வாகனத்தில் காட்சியளித்தார். மாட வீதிகளில் பல்வேறு மாநில நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. இன்று பிரம்மோற்சவத்தின் 8ம் நாளாகும். இன்று காலை தேரோட்டமும், இரவு குதிரை வாகனத்திலும் தாயார் அருள் பாலிக்க உள்ளார்.
நாளை பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியோடு பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் அவதரித்த தாமரை தடாக குளத்தில் நாளை தாயார், சக்கரத் தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு புனித பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.