

புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா முடிந்து கச்சத்தீவு கடற்கரையிலிருந்து மீண்டும் தாயகத்துக்கு புறப்பட்ட இரு நாட்டு பக்தர்கள். படம்: எல். பாலச்சந்தர்
ராமநாதபுரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. இங்கு நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நெடுந்தீவு பங்குத் தந்தை பத்திநாதன்கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, சிலுவைப் பாதை, திருப்பலி, தேர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வாக நேற்று காலை கூட்டு திருப்பலி நடைபெற்றது. யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜோசப்தாஸ் ஜெபரத்தினம், நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், ராமேசுவரம் வேர்கோடு பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் ஆகியோர் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் திருப்பலி நடத்தினர்.
இதில், இலங்கை கடற்படையின் வைஸ் அட்மிரல் மனகோடா,வடக்கு கட்டளை தளபதி கேப்டன் லியங்கமேகி, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி சாய் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்தியாவிலிருந்து சென்ற 3,741 பேர், இலங்கையிலிருந்து சென்ற 9 ஆயிரம் பேர் என 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று காலை பக்தர்களுக்கு இலங்கை கடற்படை சார்பில் உணவு வழங்கப்பட்டது. பின்னர், இந்தியாவிலிருந்து சென்ற பக்தர்கள் நேற்று மாலை ராமேசுவரம் திரும்பினர்.
விரைவில் பேச்சுவார்த்தை... இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியஇழுவைப்படகு மீனவர்கள் சிலர் சட்டவிரோதமாக செயல்படுவதால் கடல் வளம் அழிகிறது. இதனால், இந்தியா மற்றும் இலங்கை நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய இழுவைப்படகு உரிமையாளர்கள் தயவு செய்து கடல் வளத்தை அழிக்கும் வேலையை செய்ய வேண்டாம்.
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் கச்சத்தீவை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா இந்தியா வந்திருந்தபோது, இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியிடம் பேசியுள்ளார். மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.