

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று முத்து திருநாரணன் கொண்டை அணிந்து, முத்து அபய ஹஸ்தம், ஸ்ரீமகாலட்சுமி பதக்கத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (டிச.30) அதிகாலை நடைபெறுகிறது. இன்று (டிச.29) மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நாளை (டிச.30) அதிகாலை நடைபெற உள்ளது.
இதற்காக உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 4.30 மணியளவில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வெளியில் வருவார். இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாயில் வழியே மூன்றாம் பிரகாரத்துக்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து, மணல்வெளி, நடைபந்தல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பின்னர் சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேருவார்.
விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. ஸ்ரீரங்கம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான இன்று (டிச.29) காலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தை சென்றடைவார்.
அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இரவு 7 மணிக்கு மேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதையான பின் 8.30 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில், பட்டர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.