

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 21-ம் தேதி, கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலச பூஜைகள் நடைபெறவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாகத் திரு மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு, அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் திருச்சானூர் கோயில் துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத், கோயில் பிரதான அர்ச்சகர் பாபு சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ட்ரினிட்டி கம்பைன்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் நிர்வாகிகள் சீதாராம், கவிதா, திரணய் மற்றும் திரிபுவன் ஆகியோர், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய சவுத்ரியைச் சந்தித்து, பிராணதான அறக்கட்டளைக்காக ரூ.2 கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கினர்.