

அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான |
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே ||
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்; |
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, ||
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? |
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் ||
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் |
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை)
கருமையான நிறத்தை உடைய கண்ணா! உன் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய பகைவர்கள், உனக்கு அடிபணிவர். அதுபோல பாவை நோன்பு இருக்கும் நாங்கள் உனது திருவடிகளில் சரண் புகுகிறோம். பல நாடுகளுக்கு அரசர்களாக இருப்பவர்கள், நாடுகளை இழந்து, தங்கள் அகந்தை நீங்கப் பெற்று, நீ பள்ளி கொண்டிருக்கும் இடத்தில் கூடி நிற்பதைப் போல, நாங்களும் உனக்கு அடிபணிந்து நிற்கிறோம்.
சூரிய சந்திரர்கள் போல் விளங்கும் உனது விழிகளால் எங்களைக் காண மாட்டாயா? என்று கண்ணனின் அருள் வேண்டி, கோதையின் தோழிகள் பாடுகின்றனர். பக்தர்களைக் காத்தரும் கண்ணனின் திருவடிகள், கண்கள் இப்பாசுரத்தில் வர்ணிக்கப்படுகின்றன.
பிறப்பற்ற நிலை அருளும் சிவபெருமானே...!
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின் ||
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம் ||
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ||
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே. ||
(திருப்பள்ளியெழுச்சி)
சூரியனின் தேரோட்டியாக விளங்கும் அருணன், கிழக்கு திசையில் வந்துவிட்டான். திருப்பெருந்துறையுள் உறையும் ஆத்மநாதரே! உன் முகத்தின் கருணை ஒளி போல, சூரியனும் இருளை நீக்கியபடி தன் ஒளியைக் காட்டிவிட்டான். உனது கண்களைப் போன்ற தாமரை மலர்கள், நீர்நிலைகளில் மலர்ந்துவிட்டன. வண்டினங்கள் தேன் குடிப்பதற்காக, அந்த மலர்களை சூழ்ந்துள்ளன.
மலை போல் அனைவருக்கும் இன்பம் தரும் சிவபெருமானே! நீ கண் விழிப்பாயாக! என்று மாணிக்கவாசகர் ஈசனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். இந்தப் பாடலில் தாமரை மலர் சிவனாகவும், அதைத் தேடி தேன் அருந்த (பிறப்பற்ற நிலை) வரும் வண்டினங்கள் தேவர்களாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன.