

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்றோர்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப். 17-ல் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17-ம் தேதி நடைபெறும் என கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் 79-வது தூண் நிலைநிறுத்தும் பணி சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பணிகளை தொடங்கும் வகையில் முதல் பணியாக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சிவாச்சாரியார்களால் முகூர்த்தக்காலுக்கான பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேகம், தீபாராதனை நடந்தன.
பின்னர் ஆயிரங்கால் மண்டபம் அருகே வடக்கு, கிழக்கு ஆடி வீதி சந்திப்பில் காலை 11.40 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் மதார் பதுருதீன், தங்கப்பாண்டி, கார்த்திகேயன், கருப்பையா, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் நா.சுரேஷ், அறங்காவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.