

சென்னை: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சென்னையில் அஷ்டலட்சுமி, வடபழனி கோயில்களில் திரளான பெண்கள் வழிபாடு நடத்தினர்.
செல்வத்தின் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டி கடைபிடிக்கப்படும் ‘வரலட்சுமி விரதம்’ நேற்று கொண்டாடப்பட்டது.
திருமணமான பெண்கள் கணவருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வேண்டியும், கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டியும், குடும்ப நலனுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொண்டனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலில் வரலட்சுமி விரத பூஜை விமரிசையாக நடைபெற்றது. கோயில் தக்கார்/ துணை ஆணையர் எஸ்.நித்யா மற்றும் செயல் அலுவலர் பெ.சக்தி ஆகியோரது மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் வழிபாடு தொடங்கியது. காலை 7.30 மணி முதல் ‘குபேர ஹோமம்’, ‘ஸ்ரீஸுக்த ஹோமம்’ நடத்தப்பட்டு, மதியம் 12 மணி அளவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் மகாலட்சுமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு, 4.30 மணிக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் அஷ்டமங்கலப் பொருட்களுடன் வைத்து பூஜிக்கப்பட்ட நோன்புச் சரடுகள், பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. மாலை 6 மணிக்கு சாயங்கால பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சயன பூஜையுடன் விழா நிறைவடைந்தது.
வடபழனி முருகன் கோயிலில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு நேற்று காலை 8.30 மணிக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பட்டுப் புடவை சார்த்தி, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்த பெண்களுக்கு ரவிக்கை துணி, மாங்கல்ய சரடு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயிலுக்கு வந்த அனைத்து பெண்களுக்கும் மாங்கல்ய சரடு வழங்கப்பட்டது. இதேபோல, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள லட்சுமி ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வீடுகளிலும் பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். சுவரில் ஸ்ரீமகாலட்சுமி ஓவியத்தை வரைந்தும், கலசம் வைத்து அதில் மகாலட்சுமியை ஆவாஹனம் செய்தும், நோன்புச் சரடு கட்டி பெண்கள் வழிபாடு செய்தனர்.
பாயசம், பொங்கல், வடை, கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்து, பூஜையை நிறைவு செய்தனர்.