

திருச்சி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நம்பெருமாள், கிருஷ்ணர் ஆகியோர் இன்று உறியடி உற்சவம் கண்டருள்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளினார். தொடர்ந்து, பண்டாரம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்த நம்பெருமாளுக்கு, திருமஞ்சனம், அலங்காரம் அமுது செய்தல், பொதுஜன சேவை நடைபெற்றது. மாலையில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இன்று (செப்.5) காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து கிருஷ்ணர் புறப்பாடாகி, காலை 9 மணிக்கு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி, மீண்டும் கிருஷ்ணன் சந்நிதி வந்து சேர்கிறார்.
பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்படும்போது, அவருடன் கிருஷ்ணர் புறப்பாடு கண்டருள்கிறார். மாலை 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்தான மண்டபம் சேரும் நம்பெருமாள், கிருஷ்ணர் இரவு 7 மணிக்கு மண்டத்தில் இருந்து புறப்படுகின்றனர்.
சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு பாதாள கிருஷ்ணன் சந்நிதி அருகே உறியடி உற்சவம் கண்டருள்கின்றனர். பின்னர் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.