

சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, காளி மற்றும் வனதேவதைகளுக்கு படையலிடும் பிரத்யேக குருதி பூஜை நடைபெற்றது. இன்று கோயில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி வழிபாட்டுக்காக கடந்த 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர் வழிபாடுகளுக்கு பிறகு, கடந்த 14-ம் தேதி ஐயப்பனுக்கு பாரம்பரிய நகைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் உச்ச நிகழ்வான மகரஜோதி தரிசனம் நிறை வடைந்ததால், அது தொடர்பான சடங்குகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மணி மண்டப வழிபாடு, படிபூஜை, ஐயப்பனை வேட்டைக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய வழிபாடுகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக, ஐயப்பன் சரங்குத்தியில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுகுறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, ‘ஐயப்பனின் பரிவார தெய்வங்கள் சரங்குத்தியில் லட்சக்கணக்கான பக்தர்களை முறைப்படுத்தி, சந்நிதிக்கு அனுப்புவதாக ஐதீகம்.
தற்போது விழா நிறைவடைந்ததால், அந்த பூதகணங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை மீண்டும் சந்நிதிக்கு ஐயப்பன் அழைத்து வருவதற்கான ஊர்வலம்தான் இது.
திரும்பி வரும்போது இசைக்கருவிகள், பட்டாசுகள் தவிர்க்கப்படும்’ என்றனர். தரிசன நிறைவு நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கணபதி ஹோமம், உச்சபூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர், சந்நிதானம், மாளிகைப் புரத்தம்மன், மணிமண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பந்தளராஜ வம்சத்தினர், தந்திரி, மேல் சாந்திகள், வழிபாட்டு ஊழியர்கள் மட்டுமே பங்கேற்ற குருதி பூஜை நடைபெற்றது. இதில் விழாவை நிறைவு செய்யும் வகையில், காளி மற்றும் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புனிதநீர் தெளிக்கப்பட்டு உணவுகள் படையலிடப்பட்டன.
இன்று (ஜன.20) ராஜ பிரதிநிதியின் பிரத்யேக தரிசனத்துக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.