

அம்மனுக்கு அலங்காரம்
புதுச்சேரி: ஏனாமில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நோட்டுகளைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் அம்மன் கோயில்களில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் இதேபோல் ஆந்திராவில் சிரவண மாதத்தில் அங்குள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அங்குள்ள அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை ஒட்டிள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கோதாவரி கிளை ஆறான கோரங்கா ஆற்றையொட்டி உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
இதில் ரூபாய் நோட்டுக்களால் மாலை செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் ஆகியவற்றைக் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அம்மனுக்கு மாலையும், அலங்காரமும் செய்யப்பட்டது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், “ஆந்திரம்- தெலங்கானாவில் சிரவண மாதத்தில் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால், லட்சுமி ஆசி வேண்டி வரலட்சுமி விரதத்தையொட்டி ஏனாம் ஆர்ய வைசிய சங்கம் சார்பில் பணத்தினால் அலங்காரம் செய்யப்பட்டது.
இந்தப் பணம் மொத்தமும் பக்தர்கள் அலங்காரத்திற்காக வழங்கியது” என்றனர்.