

வைகாசி சர்வ அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கானோர் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
ராமேசுவரம்: வைகாசி சர்வ அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கானோர் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
சூரியனும், சந்திரனும் சேரும் அமாவாசையன்று முன்னோருக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என்றும் அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம், உணவும், நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி, வைகாசி சர்வ அமாவாசையையொட்டி கடந்த சனிக்கிழமை நள்ளிரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் ராமேசுவரம் வரத்தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே ராமநாதசுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அக்னி தீர்த்தக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கடலில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தக் கிணறுகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். அதைத் தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம், சேதுக்கரை, மாரியூர் கடற்கரைகளிலும் அமாவாசையையொட்டி பக்தர்கள் கடலில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.