

அழகர்கோவில் மலை்யில் உள்ள சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) கோபுரக் கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள். படங்கள்: நா. தங்கரத்தினம்
மதுரை: மதுரை அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் (பழமுதிர் சோலை) நேற்று அதிகாலை 5.55 மணியளவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘அரோகரா’ ‘அரோகரா’ முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆறாவது படை வீடு எனும் பெருமை கொண்டது சோலைமலை முருகன் கோயில். இக்கோயிலில் கடந்த 2014-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் நடந்து வந்தன. அதைத்தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி காலையில் மங்கள இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஜூலை 2-ம் தேதி காலை முதல்கால யாக வேள்வி, ஜூன் 3-ம் தேதி காலை இரண்டாம் கால யாக வேள்வி, அன்று மாலை மூன்றாம் கால யாக வேள்வி, ஜூலை 4-ம் தேதி நான்காம் காலமற்றும் ஐந்தாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆறாம்கால யாக வேள்வி நடந்தது. பின்னர் 5.15 மணியளவில் யாக குண்டங்களில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. வித்தக விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஆதிவேல் சுவாமி விமானங்கள், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு அதிகாலை 5.55 மணியளவில் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’, ‘அரோகரா’ என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
விழாவில் அமைச்சர் நிர்மல்குமார், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி அழகர் மலைப் பாதை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.