

சதுரகிரி மலைப்பாதையில் வறண்டு காணப்படும் ஓடை.
வத்திராயிருப்பு: சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்குகிறது. மலைப்பாதையில் உள்ள ஓடைகள் வறண்டுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேவையான அளவு குடிநீர் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக.10 முதல் 13-ம் தேதி வரைநடை பெறுகிறது. பக்தர்களுக்காக மலைப்பாதையில் 5 இடங்களில் நிரந்தர குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடி அமாவாசைக்காக கூடுதலாக 5 இடங்களில் தற்காலிக குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் மழை இல்லாததால், சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகள் நீரின்றி வறண்டுள்ளன. தற்காலிக குடிநீர் தொட்டி, குடிநீர் பாட்டில்கள் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், ஆடி அமாவாசை திருவிழாவுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் பக்தர்கள் தேவையான குடிநீரை உடன் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மலையில் குளிக்க நீர் இருக்காது என்பதால் பக்தர்கள் அடிவாரத்திலேயே குளித்துவிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சதுரகிரி செல்லும் பக்தர்கள் பாதுகாப்பான தாணிப்பாறை பாதையைப் பயன்படுத்தவும், ஒருவர் பின் ஒருவராக இறங்குபவர்களுக்கு வழிவிட்டு மலையேறவும், உடல்சோர்வு ஏற்பட்டால் ஓய்வெடுத்து விட்டு, மலையேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், இதயக் குறைபாடு மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளோர், உடல் நலக்குறைவு உள்ளோர் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட ஆக.10 முதல் 13-ம் தேதி வரை 4 நாட்களும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் மலையேறும் பக்தர்களுக்காக 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் மலையடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளன.