Published : 21 Sep 2017 10:52 AM
Last Updated : 21 Sep 2017 10:52 AM

மன இருள் நீக்கும் நவராத்திரி

புரட்டாசி மாதத்தில் வரும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. ஒன்பது இரவுகளும் அம்பிகையை நினைத்து வழிபட்டால் மன இருள் அகன்று மங்களம் உருவாகும். 9 நாட்களையும் 9 பெண் சக்திகளின் வடிவாக வழிபடுகின்றனர். வாமா, ஜேஸ்டா, ரௌத்ரி, காளி, பலவிகரணி, கலவிகரணி, பலபிரதமணி, சர்வபூதமணி, மனோண்மணி என்பவையே அந்த சக்திகள். வட மாநிலங்களில் தசரா என்ற பெயரில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

கலசத்தில் தேவியின் வாசம்

பூஜை அறையில் முதல் நாள் ஒரு பித்தளைச் செம்பில் வாசனைத் திரவியங்களோடு நீரிட்டு மலர்ச்சரம், சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். தேவியின் 9 திருநாமங்களைச் சொல்லித் தூப தீப நிவேதனம் செய்து ஆரத்தி எடுத்த பிறகு கொலுப்படிகளை அமைக்க வேண்டும். 9,7,5 எண்ணிக்கையில் கொலுப்படிகளை அமைக்கலாம். மேல்படியில் கலசத்தை வைக்க வேண்டும்.

9 இரவுகளில் 9 விதிகள்

மனித வாழ்க்கையில் ஏற்படுகிற பல்வேறு இடர்களை நீக்கி இன்பங்களை அருளிட 9 சக்திகளாக தேவி அவதாரம் எடுக்கிறாள். அதை வெளிப்படுத்த முதல் நாள் மகேஸ்வரியாக 2 வயதுச் சிறுமியை மனைப்பலகையில் அமர்த்தி உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். அரிசி மாவால் பொட்டுக் கோலமிட்டு வெண்பொங்கல், பருப்புவடை, சுண்டல் படைத்துத் தோடி ராகம் பாடச் சொல்லலாம்.

2-வது நாள் மூன்று வயதுச் சிறுமியை ராஜ ராஜேஸ்வரியாக வர்ணித்துத் தாமரைக் கோலமிட்டு முல்லை, துளசி, சாமந்தியால் அர்ச்சனை செய்து புளியோதரை, வேர்க்கடலை, சுண்டல் படைத்து கல்யாணி ராகக் கீர்த்தனை பாடவேண்டும்.

3-வது நாள் நான்கு வயதுச் சிறுமியை கல்யாணியாக வர்ணித்து மலர்க் கோலமிட்டு, செண்பகப் பொட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்து கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் படைத்து காம்போதி ராகம் பாடச் சொல்ல வேண்டும்.

4-வது நாள் மகாலட்சுமி இல்லத்தில் எழுந்தருள்வாள். ரோகிணியாக 5 வயதுச் சிறுமியை பாவித்து பூஜை செய்து செந்தாமரை, ரோஜா மலர்களால் அர்ச்சித்துத் தயிர் சாதம், பாயசம், பட்டாணிச் சுண்டல் படைத்து பைரவி ராகம் இசைக்க வேண்டும்.

5-வது நாள் 6 வயதுச் சிறுமியை வைஷ்ணவியாக வர்ணித்து கடலை மாவால் பறவைக் கோலமிட்டுக் கதம்ப மலர்களால் பூஜை செய்து பாலன்னம், பருப்புச் சுண்டல் படைத்து பந்துவராளி ராகம் பாடவேண்டும்.

6-வது நாளன்று 7 வயதுச் சிறுமியை இந்திராணியாகப் பாவனை செய்து கடலை மாவால் தேவியின் திருநாமத்தைக் கோலமாகப் போட்டு பாரிஜாதம், செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து தேங்காய் சாதம், பால் பாயசம், படைத்து நீலாம்பரி ராகத்தில் பாடி வணங்க வேண்டும்.

7-வது நாள் 8 வயதுச் சிறுமியை மகாசரஸ்வதியாகப் பாவித்து வாசனை மலர்களைக் கோலமாக அமைத்து, தாழம்பூ, மல்லிகை மலர்களால் வழிபட்டு வெண்பொங்கல், கடலைச் சுண்டல் படைத்து பிலஹரி ராகத்தில் பாடி வழிபட வேண்டும்.

8-வது நாள் 9 வயதுச் சிறுமியை மகா கவுரியாகப் பூஜை செய்து சம்மங்கி, வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்துத் தாமரைக் கோலமிட்டு பாலன்னம், மொச்சை சுண்டல் படைத்து புன்னகவராளி ராகம் பாடி வழிபட வேண்டும்.

9-வது நாள் பரமேஸ்வரியாக வில், பாணம், அங்குசத்துடன் தேவி எழுந்து வருகிறாள். மரிக்கொழுந்து, துளசி, வெண்மலர்களால் அர்ச்சித்து உளுந்தவடை, சர்க்கரை அன்னம் படைத்து வசந்த ராகக் கீர்த்தனைகளைப் பாடி சக்தி தேவியை மகிழ்விக்க வேண்டும். கலைவாணியை வழிபடுதல் அவசியம்.

10-வது நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. மூன்று சக்திகளான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தீயசக்திகளை அழித்து வெற்றிகண்டு மக்களுக்கு நல்வாழ்வை அருளும் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.

லலிதா பரமேஸ்வரியே சரணம்.

மனித வாழ்க்கையில் ஏற்படுகிற பல்வேறு இடர்களை நீக்கி இன்பங்களை அருளிட 9 சக்திகளாக தேவி அவதாரம் எடுக்கிறாள். அதை வெளிப்படுத்த முதல் நாள் மகேஸ்வரியாக 2 வயதுச் சிறுமியை மனைப்பலகையில் அமர்த்தி உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x