Published : 15 Apr 2023 05:25 AM
Last Updated : 15 Apr 2023 05:25 AM

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி: டிச.20-ல் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாங்கம் வாசிக்கும் சிவாச்சாரியார். படம்: வீ.தமிழன்பன்

காரைக்கால்: தமிழ்ப் புத்தாண்டான சோபகிருது ஆண்டின் தொடக்கத்தையொட்டி, நிகழாண்டுக்கான வாக்கிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு நடைபெற்றது.

கோயிலில் போகமார்த்த பூண்முலையம்மை சன்னதிக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்தனர். முன்னதாக, பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கோயிலில் நடைபெற உள்ள விழாக்கள் தொடர்பான நாள், நேரம் குறித்து பஞ்சாங்க வாசிப்பின்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நிகழாண்டு டிச.20-ம் தேதி (மார்கழி 4) சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது எனவும், அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே அனைத்து விழாக்களும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x