

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமி மலையிலுள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 60 தமிழ் ஆண்டு பெயர்களுடன் கூடிய படிகளுக்குத் சிறப்பு பூஜை நடைபெற்றது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், தமிழ் வருடத்தின் பெயர்களான பிரபவ முதல் அட்சய வரையிலான 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் 60 படிக்கட்டுக்களாக அமைந்துள்ளன. இக்கோயிலில், ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத் தன்று, 60 படிகளுக்கு, பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன் படி, நிகழாண்டு தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று படிகளுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், சோபகிருது ஆண்டிற்குரிய படிக்குச் சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து பன்னிரு திருமுறைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நிகழாண்டில் மழைவளம் வேண்டியும், வறட்சி நீங்கி தானிய விளைச்சல் பெருகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமி நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.