Published : 14 Apr 2023 06:14 AM
Last Updated : 14 Apr 2023 06:14 AM

சித்ரா பெளர்ணமி தினத்தில் சிறப்பு சேர்க்கும் தெய்வ வழிபாடு

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி மிகச் சிறப்பு வாய்ந்தது. நடப்பு ஆண்டு மே மாதம் 5-ம் தேதி சித்ரா பெளர்ணமி தினம் கொண்டாடப்பட உள்ளது. சித்ரா பெளர்ணமி தினத்தன்று, வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், வீட்டில் இதுவரை இருந்த கடன் தொல்லையில் இருந்தும், பணக் கஷ்டத்தில் இருந்தும் மீள்வீர்கள் என பெரியவர்கள் கூறுகின்றனர்.

சித்ரா பௌர்ணமி எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சக்தியும் சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பது நம் ஐதீகம்.

ஆகவே, அந்த நாளில் கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை வாழ்வில் செம்மையுறச் செய்யும் என்பது நம்பிக்கை. கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் வீட்டின் பூஜை அறையையே கோயிலாக பாவித்து, நாமே பூஜைகளும் வழிபாடுகளும் செய்யலாம். மற்ற நாட்களைவிட, சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம்.

இதுதொடர்பாக அர்ச்சகர்கள் கூறியதாவது: சித்திரை மாதத்துக்கு இருக்கும் சிறப்புகள் அதிகம். சித்திரைத் திங்கள் விழா என்பது சூரியனின் நகர்வு நிலையைக் கொண்டு தமிழர்களால் கொண்டாடப்படும் ஒருநாள் ஆகும். சித்திரை மாதம் வசந்த காலத்தின் தொடக்கம் என்பதால் செடிகொடிகள் பூத்துக் குலுங்குகின்ற காலமாக அமைகிறது. சி‌த்ரா பௌர்ண‌மி அ‌ன்று அதிகாலை‌யி‌ல் எழுந்து, கு‌ளி‌‌த்து முடி‌த்துவிடுங்கள்.

முதல் நாளே, இல்லத்தை துடைப்பத்தால் கூட்டி சுத்தமாக்கி, தண்ணீர் விட்டு, நன்றாகத் துடைத்து விடுங்கள். அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் துடைத்து வைத்திருங்கள். பிறகு, சுவாமி படங்களுக்கு, சந்தனம், குங்குமம் இடுங்கள். தொடுத்து வைத்துள்ள மலர்களால் அலங்கரியுங்கள்.

சித்ரா பெளர்ணமி நாளில், உங்கள் ‌குலதெய்வத்தை வணங்குங்கள். அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்தை, உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள். அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள்.

அதாவது, வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ, கர்ப்பிணியாகவோ இருந்து உயிரிழந்திருப்பார்கள். அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம், குங்குமம் இடுங்கள். மலர்களால் அலங்கரியுங்கள்.

குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியமான வழிபாடு.

எனவே இந்த நாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்த தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். அக்கம் பக்கத்தாருக்கு நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.

அதேபோல், மாலையில் பூஜை அறையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

மாலை பூஜையில், பயறு வகைகள் கொண்டு சுண்டல் மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள்.

மனதார சந்திர பகவானிடம் வேண்டிக் கொள்ளுங்கள். முக்கியமாக, சித்ரா பெளர்ணமி தினத்தன்று இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குங்கள். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். இல்லத்தில் இதுவரை இருந்த சண்டை சச்சரவெல்லாம் போய், மகிழ்ச்சியும், குதூகலமும் குடிகொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x