

மாசி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெறுவது வழக்கம்.
இதன்படி மாசி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,008 வடைகளால் ஆன மாலை அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து, 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, நாமக்கல் கோட்டை சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.