

காளஹஸ்தி: பஞ்ச பூத திருத்தலங்களில் காளஹஸ்தி சிவன் கோயில் வாயுத்தலமாக விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. பக்தனுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறையின்படி நேற்று மாலை 4 மணியளவில், காளஹஸ்தி சிவன் கோயில்அருகே உள்ள மலைக் கோயிலான பக்த கண்ணப்பர் கோயிலில், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர்.
இதனை தொடர்ந்து கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காளஹஸ்தி சிவன் கோயில் கொடி கம்பத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். வரும் 18-ம் தேதி மகா சிவராத்திரியையொட்டி, நந்தி வாகன சேவை நடைபெற உள்ளது. இரவு லிங்கோத்பவ தரிசனம் நடக்க உள்ளது. 19-ம் தேதி காலை தேர்த்திருவிழாவும், இரவு தெப்போற்சவமும் நடக்கிறது. 20-ம் தேதி பார்வதி திருக்கல்யா ணம், 21-ம் தேதி சபாபதி திருக்கல்யாணம், 22ம் தேதி சுவாமி கிரிவலம், 23-ம் தேதி தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சிகள் நடைபெறும். 24-ம் தேதி பூப்பல்லக்கு திருவிழாவும், 25-ம் தேதி ஏகாந்த சேவையும் நடைபெற உள்ளன.
திருப்பதி கபிலேஸ்வரர் கோயில்பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளானநேற்று காலை உற்சவ மூர்த்திகளான பார்வதி சமேத சிவ பெருமான்பூதகன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல் திருமலை திருப்பதிதேவஸ்தான கோயிலான நிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று மாற்றுத்திறனாளிகள், 65 வயது நிரம்பிய பக்தர்களுக்காக இணையத்தில் ஆன்லைன் மூலம் டிக்கெட்களை வெளியிட உள்ளது.