

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நாளை (பிப்.5) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைபூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (பிப். 5) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோயில் திருக்காப்பிடப்படும்.
பிற்பகலில் உச்சிகால அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான், வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயிலை சென்றடைகிறார்.
குவியும் பக்தர்கள்: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்க சாலைகளில் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் அணி அணியாக வந்ததை காண முடிந்தது. இதனால் கோயில் வளாகத்தில் முருக பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி எல்.பாலாஜி சரவணன் நேற்று ஆய்வு செய்தார். டிஎஸ்பி ஆவுடையப்பன், ஆய்வாளர்கள் முரளிதரன், கனகாபாய் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து எஸ்பி தெரிவித்ததாவது:
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எஸ்பி தலைமையில், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 13 ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விபத்துக்களை தவிர்க்க சாலையில் வலது புறமாக நடந்து வரவேண்டும். அதேபோன்று பாதயாத்திரை வரும் பக்தர்கள் முதுகு குதி மற்றும் தோள் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதையாத்திரை செல்ல வேண்டும்.
மேலும் ஜாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, கொடிகளைக் கொண்டு வரவோ கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
செயலர் ஆய்வு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையும், எச்சிஎல் நிறுவனமும் இணைந்து ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.