

பழநி: பழநி கோயிலில் கும்பாபி ஷேகத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் கட்டண தரிசனமின்றி பக்தர்கள் பொது தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் பொது தரிசனம், ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் உள்ளது. கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, நேற்று ஒருநாள் மட்டும் கட்டண தரிசனம் இன்றி அனைத்து பக்தர்களும் சமமாக பொது தரிசனம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களுக்கு கும்பாபிஷேக பிரசாத பை வழங்கப்பட்டது. நேற்று மாலையில் இருந்து பாதயாத்திரை மற்றும் வெளியூர் பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது. இன்று (ஜன.29) பெரிய நாயகியம்மன் கோயிலில் காலை 9.30 மணிக்கு தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.