Published : 26 Jan 2023 04:23 AM
Last Updated : 26 Jan 2023 04:23 AM

திருமலையில் 28-ம் தேதி ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் மலையப்பர் வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா வரும் 28-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சூரிய ஜெயந்தி, மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று திருமலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் தர்மாரெட்டி கூறியதாவது:

திருமலையில் வரும் 28-ம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருள உள்ளார். இதைத்தொடர்ந்து, சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமன் வாகன சேவைகள் நடைபெற உள்ளன.

மதியம் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பின்னர் மீண்டும் கற்பகவிருட்ச வாகனம், சர்வபூபால வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளில் எழுந்தருள உள்ளார். இதையொட்டி, அன்றைய தினம் சர்வ தரிசன டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் நேரடியாக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக சர்வ தரிசன முறையில் மட்டுமே சுவாமியை தரிசிக்க இயலும். விஐபி தரிசனம் உட்பட அனைத்து சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x