

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் நேற்று நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. ஜன. 2-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. தொடர்ந்து ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, நம்பெருமாள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர், நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வாருக்கு நம்பெருமாள் மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவடியில் சரணாகதி
அப்போது, சொர்க்கவாசலுக்கு செல்லும் வழியில் பக்தர் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி, பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் 2 பேர் கொண்டு சென்று நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படுமாறு சரணாகதியாக சமர்ப்பித்து, நம்மாழ்வாரை துளசியால் மூடினர்.
அதன்பின், நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றி, நம்பெருமாள் முன் தூக்கிக் காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகம், துளசி மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டன. பின்னர் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தமும், இரவு 9 மணி முதல் இன்று (ஜன.13) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவையும் நடைபெற்றது.
பின்னர், அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.